Thursday 19 July 2012

பாடல் 2: பாயிரம்: கடவுள் வாழ்த்து





பாடல்:
சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை
எற்கு உணர்ந்த அரிது எண்ணிய மூன்றினுள்
முற் குணத்தவரே முதலோர் அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்று அரோ

நோக்கம்:
இறைவன் ஒருவனே. அந்த இறைவனை ஒற்றுமையாய் நாம் வணங்குதல் வேண்டும்

பொருள்:
சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை (பேரறிவு பெற்ற ஞானிகளும் அறிந்து)
எற்கு உணர்ந்த அரிது எண்ணிய மூன்றினுள் (உணர்த்த முடியாத அக்கடவுளின் தன்மையை உணர்த்தல் அரிது. பலராலும் கூறப்படும் மூன்று குணங்களுள்)
முற் குணத்தவரே முதலோர் அவர் (மேன்மையான குணத்தை உடையவரே தேவர்களில் முதல்வர் ஆவர்)
நற்குணக் கடல் ஆடுதல் நன்று அரோ (அவரது மங்கள குணங்கள் என்னும் கடலில் மூழ்குதல் நமக்கு நன்மையாகும்)


விளக்கம்:
          இங்கே மூன்று வகை குணங்களை பாடல் உரைக்கின்றது. அந்த மூன்று வகை குணங்களும் முறையே தாமசம், இராஜ, சாத்வீகம் என்பனவாகும்! தாமசம் சோம்பலுக்கு உரிய  குணமாகும். சோம்பல், மந்தத்தன்மை, அறியாமை, மன சோர்வு, சுயநல குணம், பிறர் வெறுக்கும் வகையில் தீய எண்ணங்களும் செயல்களும் நிறைந்ததாக இருத்தல் இவை எல்லாவற்றையுமே நாம் தாமசக் குணத்திற் கீழே கொண்டு வருவோம். முக்கியமாக, தாமச குணத்தில் ஒரு தர்மம் கிடையாது, தான் மட்டும் வாழ்ந்தால் போதும் அதற்காக பிறரை அழிக்க வேண்டும் என்றாலும் அதில் தவறில்லை; தவறு என்ற பாகுபாடே இல்லாத ஒரு கீழ் நிலை குணமாகும் தாமசம்! தாமச குணம் செயலற்று கிடக்கும் தன்மையைக் குறிப்பதினால், அதை கருப்பு வண்ணத்தோடு எப்போதும் இணைத்து பார்ப்பது வழக்கம். உடல் சார்ந்த தேவைகளே இந்த குணத்தின் பயன்களாகும். சாபிடுவது, உறங்குவது, இனப்பெருக்கம் என்றே வாழ்க்கை முறை இந்த குணத்தில் இருக்கும். இவையை தாண்டி வாழ்வின் சூட்சமங்களை அறிய இந்த குணம் முற்படுவதில்லை.
                   
ஆளுமை ராஜ குணமாகும். பொறாமை, கோபம், தற்பெருமை, தலைக்கணம் இவை எல்லாம் இராஜ குணத்திற்குரிய குணங்களாகும். தாமசம் செயலற்று கிடக்கும் நிலை என்றால், இராஜ குணம் அதீத செயல் நிறைந்த குணமாகும். இதில் ஒரு தலை பட்சமான தர்மம் கடைபிடிக்கப் படுகின்றது. தர்மம் என்ற பெயரில் சமூகம் சில நியதிகளை தனக்கே இட்டுக் கொண்டு அது சரி என்று கருதி, அதை மீறுபவர் எல்லாம் தவறு இழைப்பவர் என்று சாடுவது போலே தான் இராஜ தர்மமும். அது ஒரு ரெண்டுங்கெட்டான் தர்மாம்கும். இராஜ குணத்தை பெரும்பாலும் இரத்த சிவப்பு வண்ணத்துடன் ஒப்பிட்டு பார்ப்பது வழக்கம். தனது ஆதீக்கத்தை நிலைநாட்டுவதிலும், உலக போகங்களை புசிப்பதிலுமே இந்த குணம் வாழ்க்கையை கடத்தும். வாழ்வின் சிறு சிறு நுணக்கமான குணநலன்கள் இந்த குணமுடையவர்க்கு அவ்வப்போது வந்து செல்லும். அனால் உயிரின் மூலத்தை இவர்கள் ஒரு போதும் உணர முற்படுவதில்லை.
                 
சாத்வீகம் இந்த உடல் தேவைகளை கடந்த குணமாகும். முன்னே சொன்ன இரண்டு குணங்களில் தோன்றும் ஒரு பரபரப்போ, மந்தத்தன்மையோ இல்லாமல் உள்ளத்திலிருந்து வெளிப்படும் ஒரு சாந்தத்தையும், அதனால் விளையும் ஆனந்தத்தையும் தனது வெளிப்பாடுகளாக கொண்ட குணமாகும். இந்த குணத்தில் தன்னலமற்ற, அனைத்தையும் அரவணைத்து செல்லும் தூய அன்பு முக்கிய குனலனாக திகழ்கின்றது. இதையே உயர்ந்த தர்மமாக எல்லா அறநூல்களும், அதை பின்பற்றும் சான்றோர்களும் வழிமொழிகின்றனர். இப்படி ஒரு ஆனந்தத்தையும், ஆழமான அமைதியையும், தூய அன்பையும் கொண்டதினால் இந்த குணம் மஞ்சள் நிறத்துடன் எப்போதும் ஒத்திருக்கும். மெய்ஞானம் அடைந்த ஞானியாரின் குணம் என்பதினால் இந்த குணம் முழுமையாக இறைநிலை ததும்பும் குணமாக விளங்குகின்றது.
      
சரி, இப்போது உங்கள் மனதில் இதில் நான் என்ன குணம் என்ற கேள்வி தோன்றலாம். நடைமுறையில் ஒரு மனிதனும் இப்படி முழுமையாக ஒரே குணத்துடன் இருப்பதில்லை. இந்த மூன்று குணங்களின் கலவையாக தான் மனிதர்கள் இருக்கின்றனர். மனிதர்கள் யாரும் தவறே இழைக்காதவர்கள் இல்லை என்று கூறுவது இதனால் தான் போலும்! இந்த மூன்று குணங்களின் கலவையாக இருந்தால் மட்டுமே உலகத்தில் வாழ்க்கையை ஓட்ட முடியும். இல்லையென்றால் உலக வாழ்க்கை நமக்கு சரிபட்டு வராது. நாள் முழுக்க உங்கள் வேலைக்காக உழைக்கிறீர்கள், அது கண்டிப்பாக ஒரு வர்த்தகம் சார்ந்த வேலையாக தான் இருக்கும் (சம்பளம் வாங்கும் எந்த வேலையும் வர்த்தகம சார்ந்து இல்லாவிட்டால் உங்களுக்கு எங்கே இருந்து சம்பளம் வரும்?), அப்போது போட்டியும், பொறாமையும், சுயநலமும் எள்ளளவேனும் நம் செயல்களில் புகுந்து விடுகின்றது. இப்படி தான் நாம் இராஜ குணத்தில் ஊறி விடுகிறோம், சில சமயங்களில். சரி என்று வீட்டிற்கு வந்தால் செய்த வேலையால் நமக்கு களைப்பு வருகின்றது அதனால் சோர்வடைகின்றோம், மந்த நிலைக்கு சென்று நமது ஆக்கத் தன்மை குறைந்து உறங்குகின்றோம். இப்படித் தான் நாம் பரவலாக தாமச குணத்தில் விழுகின்றோம். பிறகு எழுந்தப்பின், நாம் பணி நிமித்தமான வேலையும் அல்லாமல், சோர்ந்திருக்கும் செயலும் அல்லாமல் நாம் சில செயல்களை செய்கின்றோம் அது பெரும்பாலும் தன்னலமற்ற, நாம் அன்பு செலுத்தும் ஒருவருக்கு என்று தூய்மையான பரிவுடன் மன அமைதியுடனும், ஈடுபாடுடனும் செய்யும் செயற்கலாகும். அப்போது நாம் சாத்வீக குணத்தின் வாசலில் நிற்கின்றோம். இப்படிப்பட்ட செயல்களுக்கு சில உதாரணங்கள் என்று 1. பெண்கள் வீட்டிற்கு  உணவு சமைப்பதையும், 2. ஆண்கள் வீட்டிற்காக கடைகளுக்கு சென்று பார்த்து பார்த்து செய்யும் கொள்வனவையும் (shopping), 3. இருவரும் பார்த்து பார்த்து தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளையும், வயோதீகர்களையும் பராமரிப்பதையும் சொல்லலாம். இப்படி சராசரி வாழ்க்கையில் ஒரு சாதாரண நபர் இந்த மூன்று குணங்களின் கலவையாக இருக்கலாம். ஆனால் ஒரு தீய எண்ணம் கொண்ட நபர் தாமசமும், இராஜ குணமும் மேலோங்கி, சாத்வீகம் மட்டுப்பட்ட நபராகவும் இருக்கலாம், இல்லை இறைநிலை அடைய சந்நியாசம் மேற்கொள்ளும் ஞானியர்கள் தாமசமும், இராஜ குணமும் மட்டுப்பட்டு சாத்வீக குணம் மேலோங்கியும் இருக்கலாம். காவியணிந்த ஆசாமிகள் கண்டிப்பாக தாமசமும், இராஜ குணமும் மேலோங்கி, சாத்வீகம் மட்டுப்பட்ட நபராக தான் இருப்பார்கள், அது வேறொரு வகை. இப்படி மூன்று குணங்களும் கலந்ததே மனித வாழ்க்கையின் ஓட்டமாகும். ஆனால் இறைவனுக்கு இந்த தேவைகள் இல்லை, அவர் சம்பளத்துக்காக வேலைக்கு சென்று வர்த்தகத்தில் ஈடுபட வேண்டிய அவசியமும் இல்லை, அதனால் சோர்ந்து களைப்புற்று வாடி போய் இளைப்பாற வேண்டிய அவசியமும் இல்லை. அதனால் அவர் தாமசமும், இராஜ குணமும் கொண்டவர் அல்லர். இவை மூன்று குணங்களுமே அவர் படைத்த குணமேயென்றாலும், இந்த மூன்று குணத்திலுமே அவர் காட்சி தந்தாலும், அவருக்குள் தாமசமும், இராஜ குணமும் இல்லை. அவைகளுள் அவர் உள்ளார், அனால் அவருள் அது இல்லை! தாமசத்தை மேலே ஏற்றி சென்றால் இராஜ குணம், இராஜ குணத்தை மேலும் மேன்மையாக்கினால் சாத்வீகம். அதனால் குணங்களின் உச்சத்திலே இறைவன் தன்னலமற்ற, தூய்மையான அன்புடன், ஆழ்மன அமைதியுடன் வீற்றிருக்கின்றான்!
      
அப்படிப்பட்ட இறைவன், பேரறிவு பெற்ற ஞானிகள் ஆனாலும் உள்ளத்தில் சிறிதும் சுயநலமின்றி, அனைத்தையும் அரவணைத்து செல்லும் அன்பு நிறைந்து இருக்காவிட்டால், அவர்களுக்கும் கருத்திலே வரமாட்டான். சிறிதும் சுயநலமின்றி, அனைத்தையும் அரவணைத்து செல்லும் அன்பு நிறைந்து இருத்தல் மிக மிக அரிதான நிலை. அதனால் இறைவனும் பேரறிவு பெற்ற ஞானியாரின் கருத்திலே வருவது அரிதாகும். அப்படிப்பட்ட பேரறிவு பெற்ற ஞானிகளும் அறிந்து உணர்த்த முடியாத அக்கடவுளின் தன்மையை உணர்த்தல் அரிது. மேற்சொன்ன  மூன்று குணங்களுள் மேன்மையான குணத்தை உடையவரான இறைவன் தேவர்களுக்கு எல்லாம் முதன்மையானவரும் கூட. அப்படிப்பட்ட இறைவன் அனைத்து வித சாத்வீக தன்மை நிறைந்த மங்கள குணங்களின் ஊற்றாகும். கடல் போன்ற மங்கள குணங்கள் நிறைந்த இறைவனை நினைத்து அந்த மங்கள கடலில் நாமும் உள்சென்று எழுந்து சாத்வீக தன்மையுடன் இவ்வுலக வாழ்க்கையை நடையிடுவோமாக. சுயநலமின்றி, அனைத்தையும் அரவணைத்து செல்லும் அன்பு நிறைந்து ஆனந்த கடலில் திளைப்போமாக!

http://www.spiritualresearchfoundation.org/articles/id/spiritualresearch/spiritualscience/sattva_raja_tama





வீட்டுப்பாடம்:
மூன்று குணங்களும் மனிதர்களுக்கு மட்டுமில்லை. உயிருடன் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்குமுண்டு. அதனால் தான் நமது கலாச்சாரம் நமது குணநலன்களை மட்டும் அல்ல நமது சுற்றுசூழலையும் கூட சாத்வீக குணத்தை ஒட்டியே அமைய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. குடிக்கும் தண்ணீரில் இருந்து அணியும் உடுப்பு வரை நமது கலாச்சாரம் நமக்கு பல நல்ல அணுகுமுறைகளை போதிக்கிறது. அவை என்னென்ன? பட்டியலிடுங்கள் பார்ப்போம்.
 
முதலில் நான் தொடங்கி வைக்கிறேன். வீட்டில் பசும் சாணியை வைத்து மொழுக வேண்டும் என்று சொல்வது. பசுவிடம் இருந்து வரும் எல்லாமுமே  சாத்வீக குணமுடையவை. அதனால் தான். அதேபோல் சாத்வீகம் அல்லாத உணவு வகைகளான பூண்டு, கரம் மசாலா ஆகியற்றை முடிந்த வரை தவிர்க்க வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வது. ஏனென்றால் இந்த உணவு வகைகளில் நிறைய தாமச, இராஜ குணங்கள் உள்ளது. ஆனால் நாமோ நாவிற்கு சுவையாக இருக்கின்றது என்று இந்த மசாலாக்கள் நிறைந்த பிரியாணி, பிரைடு ரைஸ் (fried rice) என்று தான் தினமும் உண்கின்றோம்!

No comments:

Post a Comment