பாடல்:
அறையும் ஆடறங்கும்
பட பிள்ளைகள்
தறையில் கீறிட
தச்சரும் காய்வரோ
இறையும் ஞானம்
இலாத என் புன் கவி
முறையின் நூல்
உணர்ந்தாரும் முனிவரோ
நோக்கம்:
கம்பர் தனது பிழை
மிகுந்த பாடல்களை சான்றோர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று
பணிவுடைமை புகுத்தல்!
பொருள்:
அறையும் ஆடறங்கும்
பட பிள்ளைகள் (பல அறைகளைக் கொண்ட வீடுகளையும், ஆடுவதற்கு அமைத்த மேடைகளையும் தோன்றுமாறு சிறு
பிள்ளைகள்)
தறையில் கீறிட
தச்சரும் காய்வரோ (தரையினிலே கிறுக்கி விளையாடினால் அவற்றைக் கண்டு சிற்ப கலையில்
தேர்ச்சிப் பெற்ற சிற்பிகள் அவர்களிடம் கோபம் கொள்வார்களோ?)
இறையும் ஞானம்
இலாத என் புன் கவி (அது போலே, ஓரளவு அறிவும் பெறாத நான் இயற்றிய அற்பமான
பாடல்களைப் பார்த்து)
முறையின் நூல்
உணர்ந்தாரும் முனிவரோ (முறையாக நூலறிவு பெற்ற சான்றோர்கள் என்னிடம் சினம் கொள்வார்களோ? கொள்ளமாட்டார்கள்!)
விளக்கம்:
கம்பரின்
பணிவுடைமை சார்ந்த பாடல்கள் இந்த பாடலுடன் முடிவடைகிறது. இந்த பாடல்களின் மூலம்
கம்பர் வாசகர்களாகிய நமக்கு வாழ்க்கையில் எவ்வளவு பணிவுடன் இருக்க வேண்டும் என்பதை
உணர்த்துகிறார். கம்பர் ஒரு தெய்வப் புலவராவார். அவருக்கு கவிப்பாடும் திறமை
வாய்த்ததே அவரது குல தெய்வமான காளி அன்னை அவர் முன்னே தோன்றி அவருக்கு கவிப்
பாடும் ஆற்றலை கொடுத்து அருளியதினால் தான். தமிழ் உலக இல்லக்கியம் என்றில்லாமல்
உலக இல்லக்கியங்களையே வியப்படைய வைக்கும் வகையில் இந்தக் காப்பியத்தையும்,
பிற அரும்பெரும் காப்பியங்களையும் இயற்றுவதற்கு கம்பரால் முடிந்தது என்றால் அதற்கு
பின் வெறும் மனித முயற்சி மட்டும் இருந்திருக்கு வாய்ப்பில்லை, தெய்வ வாக்கும் கட்டாயம் இருந்தே இருக்க வேண்டும்! அப்படிப்பட்ட கம்பர்
தனக்கு பணிவு இருக்கிறதோ இல்லையோ, அடக்கம் இருக்கிறதோ
இல்லையோ, தன்னால் இவை எல்லாம் செய்திருக்க முடியும் என்று
எண்ணி இறுமாப்புடன் இருக்கவில்லை (அவர் இருந்திருந்தாலும் காளி அன்னை அருளால் அவர்
எப்படியும் புகழ் பெற்றிருப்பார்). தன்னைத் தாழ்த்தி ரசனையை உயர்த்தி வாசகனை
சிறப்படைய வைத்துள்ளார் கம்பப் பெருமான். இது தான் கம்பருக்கும் ஒத்தக்
கூத்தாருக்கும் உள்ள வித்தியாசம். இருவருமே சமகால புலவர்கள்,
ஒரே அரசனிடம் ஒரே அவையில் புலவர்களாகப் பணியமர்த்தப் பட்டவர்கள். கம்பரை விட
ஒருப்படி மேலே புலமை வாய்ந்தவர் ஒத்தக்கூத்தர் என்று கூறினால் அது மிகையில்லை.
ஆனால் கம்பரின் சரித்திர வெற்றிக்குக் காரணம் வெற்றிக்குத் தேவையான சரியான கலவையாக
அவர் இருந்தார். சுத்தமானத் தங்கத்தை உருக்கி நாம் அச்சிலே வார்த்தால் நகை வராது
என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே. தங்கத்துடன் சொம்புக் கலவையாக செய்து
அச்சிலே வார்த்தால் தான் நடைமுறை பயன்கள் கிட்டும். ஆனால் சுத்தமான தங்கம்
சொம்புக் கலந்த தங்கத்தை விட ஒரு படி மேலே தான். இதில் சுத்தமான தங்கம் ஒத்தக்
கூத்தர், சொம்புக் கலந்த தங்கம் கம்பர். கம்பருக்கு
ஒத்தக்கூத்தர் போலே செவ்வனே காவித்திரம் வாய்க்கவில்லை ஆனால் அதற்கு ஈடுக்
கடுக்கும் வகையில் பணிவுடைமை, இறையருள், என இன்னப் பிற கருணை குணாதிசயங்கள் மிகுந்தவராக இருந்தார். (கொஞ்சம்
திருட்டுத் தனமும் உண்டு, போகப் போக பார்ப்போம் அதை). அதனால்
அவரின் புகழ் உலகலாவப் பரவியது, கம்பரின் இராமக்காதை தான்
உலகில் நிலைப்பெற்று இருக்கின்றது. ஒத்தக்கூத்தர் இயற்றிய இராமக்காதை இயற்றிய
மாத்திரத்திலேயே ஒத்தக்கூத்தாராலேயே அழிக்கப்பட்டது. அதனால் பணிவு நம்மை மேலே மேலே
தான் உயர்த்தும். பொறுமை புவியாளும். ஒரு காலி கிண்ணத்தில் தான் மேலும் நீரை ஊற்ற
முடியும். அதே போலே பணிவான மனிதன் தான் மேலும் கற்று மேலும் உயர முடியும். நிரம்பி
வழியும் கிண்ணத்தில் ஊற்றும் நீர் வழிந்து ஒன்றுக்கும் உதவாமல் தான் போகும்.
தனக்கு எல்லாமே தெரியும் என்ற மமதையும், அகங்காரமும் நம்மை
வாழ்க்கையில் புதிதாக எதையும் கற்கவும் விடாமல், தெரிந்ததை
செய்யவும் விடாமல் அறிவுக் கண்ணை மறைத்து அழிவு பாதைக்குக் கொண்டு செல்லும்.
அதனால் பணிவுடைமையை எல்லோரும் பின்பற்றுவோமாக!
No comments:
Post a Comment